Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் புலனாய்வு குழு

புதுடெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இஸ்ரேல் புலனாய்வு குழு இந்தியா வருகிறது.

மத்திய டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 29-வது ஆண்டு விழா இஸ்ரேல் தூதரகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது தூதரகம் அருகே சில மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. இதில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்தில் டெல்லி போலீஸின் சிறப்பு புலனாய்வு குழு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ),தேசிய பாதுகாப்பு படையை (என்எஸ்ஜி) சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை பயன்படுத்தி குண்டுதயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குண்டு வெடித்த பகுதியில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பொறுப்பு

சம்பவ இடத்துக்கு அருகே ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. "ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, ஈரான்அணு விஞ்ஞானி பக்ரிசாதே ஆகியோரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இஸ்ரேல் தூதரகம் அருகேவெடிகுண்டை வெடிக்க செய்கிறோம். இது சிறிய முன்னோட்டம்"என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத குழு இதுவரை அறியப்படாத அமைப்பாகும். விசாரணையை திசை திருப்புவதற்காக தீவிரவாதிகள் இந்த பெயரை பயன்படுத்தியுள்ளனரா, இல்லை இந்த பெயரில்புதிய தீவிரவாத அமைப்பு உருவாகியுள்ளதா என்பது குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

சிசிடிவியில் 2 பேர் சிக்கினர்

இஸ்ரேல் தூதரகம் அருகே அமைந்துள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களின் பதிவை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய 2 பேர், வாடகை காரில் இருந்து இறங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாடகை கார் ஓட்டுநரையும் சந்தேகத்துக்குரிய 2 மர்ம நபர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல்வெளியுறவு அமைச்சர் காபி அஸ்கெனாசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் தூதரகஊழியர் ஒருவரின் மனைவி, ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அப்போது ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

தற்போதைய குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஈரான் உள்ளதாக இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் குற்றம் சாட்டியுள்ளது. மொசாட் உளவுத் துறையின் புலனாய்வு குழு, வெடிகுண்டு நிபுணர்கள் விரைவில் டெல்லி வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியபகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x