Last Updated : 30 Jan, 2021 01:07 PM

 

Published : 30 Jan 2021 01:07 PM
Last Updated : 30 Jan 2021 01:07 PM

யார் இந்த ராகேஷ் டிகைத்? -டெல்லி காவல்துறை காவலர் பணியிலிருந்து விலகி விவசாயிகளுக்காக 44 முறை சிறை சென்றவர்

ராகேஷ் டிகைத்

புதுடெல்லி

டெல்லியில் போராடும் விவசாயிகளின் முக்கியத் தலைவராக இருப்பவர் பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயூ) ராகேஷ் டிகைத். பிகேயூவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான இவர், கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் திடீர் எனப் பிரபலமாகி உள்ளார்.

உத்தரப்பிரதேச மேற்குப்பகுதியில் உள்ள முசாபர்நகரின் சிசவுலி கிராமத்தில் ஜூன் 4, 1969 இல் பிறந்தவர் ராகேஷ். இவரது தந்தையும் நாட்டின் விவசாய சங்கங்களின் தலைவராக இருந்து புகழ் பெற்றவரான மஹேந்தர்சிங் டிகைத்.

பாரதிய கிஸான் யூனியன் எனும் விவசாய சங்கத்தை 1987 இல் அமைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் மஹேந்திரசிங். இவர் தன் சங்கம் சார்பில் விவசாயிகளின் மின்சாரப் பிரச்சனைக்காக முசாபர்நகரில் மிகப்பெரியப் போராட்டம் நடத்தி இருந்தார்.

அதில் நடைபெற்றக் கலவரத்தில் விவசாயி ஜெய்பால் மற்றும் உ.பி. மாநிலக் காவல்துறை காவலர் அக்பர் ஆகியோர் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகினர். அப்போது, டெல்லி காவல்துறையில் ஒரு சாதாரணக் காவலராக இணைந்து பணியாற்றி வந்தார் ராகேஷ்.

எனினும், சிறுவயது முதலாக தனது தந்தையின் போராட்டக் குணங்களால் ஈர்க்கப்பட்டு வந்தார் ராகேஷ். கடந்த 1993 இல் மஹேந்திரசிங் விவசாயிகளை திரட்டி டெல்லி செங்கோட்டையை நோக்கி ஒரு பெரிய பேரணி நடத்தினார்.

அப்போது, இனி தமக்கு இக்காவலர் பணி தேவையில்லை எனக் கூறி விவசாயிகளுக்காக ராஜினாமா செய்தார். தொடர்ந்து தனது மூத்த சகோதரர் நரேஷ் டிகைத்துடன் இணைந்து ராகேஷும் பாரதிய கிஸான் யூனியனை நடத்தி வருகிறார்.

முசாபர்நகரின் ஜாட் சமூகத்தினரின் முக்கியக் காப் பஞ்சாயத்தாகக் கருதப்படுவதன் தலைவராக நரேஷ் வகிக்கிறார். இவரே பிகேயூவின் தலைவராகவும் இருந்தாலும், சங்கத்தில் அவரை விட முக்கியத் தலைவராக ராகேஷின் செல்வாக்கு உள்ளது.

தனது தந்தையை போல் ராகேஷும் நடத்தியப் போராட்டங்களால் அவர் 44 முறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதில், மொத்தம் 39 நாட்களுக்காக சிறைவாசமும் கழித்தார் ராகேஷ்.

உ.பி. விவசாயிகள் இடையே நல்ல செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி சார்பில் முசாபர்நகர் தொகுதியில் மக்களவைக்கும் அவர் போட்டியிட்டார்.

கடந்த 2014 இல் நடைபெற்ற இத்தேர்தலில் ராகேஷுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதால் கட்சியிலிருந்து விலகி விட்டார். இவருக்கு மனைவி சுனிதா தேவி, மகன் சரண்சிங், சீமா மற்றும் ஜோதி என இருமகள்களும் உள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் காஜிபூர் எல்லையில் ராகேஷ் டிகைத் தலைமை வகிக்கிறார். இப்போராட்டக்குழுவின் முக்கிய உறுப்பினராகவும் ராகேஷ் இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x