Published : 14 Jan 2021 04:25 PM
Last Updated : 14 Jan 2021 04:25 PM

பிரதமரின் 3-ம் கட்ட திறன் இந்தியா திட்டம்: நாளை தொடக்கம்

புதுடெல்லி

பிரதமரின் மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டம், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் நாளை தொடங்கப்படும்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் தலைமையில் இந்த 3வது கட்டம், புதிய மற்றும் கோவிட் தொடர்பான தொழில் திறன்களில் கவனம் செலுத்தும்.

மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டத்தின் கீழ், 2020-2021ம் ஆண்டில் எட்டு லட்சம் பேருக்கு, ரூ.948.90 கோடி செலவில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 729 பிரதமரின் திறன் மையங்கள், பட்டியலில் உள்ள இதர பயிற்சி மையங்கள் மற்றும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐடிஐக்கள் ஆகியவை திறமையான தொழிலாளர்களை உருவாக்க பயிற்சியை அளிக்கவுள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது பிரதமரின் திறன் இந்தியா திட்டங்கள் மூலம் கற்ற அனுபவங்கள் அடிப்படையில், திறன் மேம்பாட்டு அமைச்சகம், மூன்றாவது பயிற்சித் திட்டத்தை புதிதாக மேம்படுத்தியுள்ளது. இது தற்போதைய கொள்கைகளுக்கு பொருந்தும் வகையிலும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட திறன் சூழலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் உள்ளது.

‘‘திறன் இந்தியா திட்டத்தை’’ மாண்பு மிகு பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவை உலகின் திறன் தலைநகராக ஆக்கும் தொலைநோக்கை எட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதமரின் திறன் இந்தியா திட்டம் அதி வேகத்தை அடைந்துள்ளது.

மூன்றாவது திறன் இந்தியா திட்டத்தை மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, இணையமைச்சர் ராஜ் குமார் சிங் முன்னிலையில் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உரையாற்றவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x