Published : 08 Oct 2015 09:47 AM
Last Updated : 08 Oct 2015 09:47 AM
ஷீனா போரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளிடமும், சிறையில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இளம்பெண் ஷீனா போரா கொலையில் அவரது தாய் இந்திராணி, இவருடைய 2-வது கணவர் சஞ்சய் கண்ணா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிக மாத்திரைகள் உட்கொண்டதால் இந்திராணி சுயநினைவிழந்தார். உடனடியாக அவரை ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். 3 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் மாலை மருத்துவமனையில் இருந்து இந்திராணியை டிஸ்சார்ஜ் செய்தனர். அதன்பின் அவர் பைகுலா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திராணி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 3 பேரிடமும் சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி மும்பை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 7-ம் தேதி (நேற்று) முடிவு அறிவிப்பதாக தெரிவித்தது.
அதன்படி, நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஷீனா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் சிறையில் 12 நாட்கள் விசாரணை நடத்தலாம் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி ஆர்.வி.அடோன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
வரும் 19-ம் தேதி வரை 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம். அன்றைய தினம்தான் 3 பேரின் நீதிமன்ற காவலும் முடிகிறது. அப்போது குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ விரும்பினால் புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு இந்திராணியின் வழக்கறிஞர் குன்ஜன் மங்கலா, சஞ்சய் கண்ணாவின் வழக்கறிஞர் ஷிரேயான்ஸ் மித்ரே ஆகியோர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், கார் டிரைவர் ஷியாம் ராயின் வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் பாவே மட்டும் சிறையில் விசாரிக்க கோரும் சிபிஐ மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT