Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தூதரக மற்றும் ராணுவ அளவில் நடந்தபேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சீனப்படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இது, கடந்த ஜூன் 15-ம்தேதி இரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ராணுவஅளவில் கடைசியாக சுசுல் பகுதியில் கடந்த நவம்பரில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.

மேலும் சீனாவுடன் ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. படைகளை முற்றிலும் விலக்கிக் கொள்ளவேண்டும், கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரலுக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. எனினும் இதை சீனா ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறும்போது “லடாக் எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் ராஜதந்திர மற்றும் ராணுவ அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை வெற்றி கிட்டவில்லை.

ராணுவ அளவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை. எல்லையில் தற்போதுள்ள நிலையே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஆக்கப்பூர்வமான முன்னேற்றமாக நான் கருதவில்லை. பேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு ஆகும். சீன எல்லைப் பகுதியில் இருந்து படைகளை இப்போது குறைக்க முடியாது. எல்லையில் பிரச்சினையை ஏற்படுத்த இந்தியா எவரையும் அனுமதிக்காது” என்றார்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, “விவசாயிகள் நாட்டுக்கு உணவு வழங்குகின்றனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் போராட்டம் அரசுக்குமிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. புதிய வேளாண் சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை விவசாயிகள் 2 ஆண்டுகள் கவனிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை நக்சல்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என எவரும் விமர்சிக்க கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x