Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM

திருப்பதி மலைவழிப்பாதையில் நடந்து சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு: 60 வயது பெண் பக்தரை 6 கி.மீ. தோளில் சுமந்த முஸ்லிம் காவலர்

திருப்பதி மலை பாதையில் பெண் பக்தரை தோளில் சுமந்து வந்த முஸ்லிம் காவலர்.

திருமலை

திருமலைக்கு நடந்து சென்ற 60 வயது பெண் பக்தர் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். அவரை மலைப்பாதையில் 6 கி.மீ தூரம் வரை தனது தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த முஸ்லிம் காவலருக்கு பாராட்டு குவிகிறது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை முன்னாள் எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்புதனது ஆதரவாளர்களுடன் அன்னமய்யா மார்கம் வழியாக ராஜம்பேட்டையிலிருந்து திருமலைக்கு வனப்பகுதியில் நடந்தே திருமலைக்கு சென்றார். இவர்களுடன் நந்தலூரு பகுதியைச் சேர்ந்தநாகேஸ்வரியம்மா (60) என்பவரும் உடன் சென்றார். ஆனால், அவரால் வனப்பகுதியில் நடக்க இயலாமல் சோர்வடைந்து மயங்கி விழுந்து விட்டார்.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஷேக் அர்ஷத், அந்த பெண் பக்தருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். பின்னர் அவரது வேண்டுகோளின்படி, அவரை தனது தோளில் சுமந்தபடி, மலைப்பாதையில் நடந்து சென்று திருமலையில் உள்ள அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்த்தார். தன் வலியை பொருட்படுத்தாமல் 6 கி.மீ தூரம் கரடு முரடான பாதையில் அந்த பெண் பக்தரை தோளில் சுமந்து சென்ற முஸ்லிம் காவலர் ஷேக் அர்ஷத்தை அனைவரும் மனதார பாராட்டினர்.

இதுகுறித்து ஷேக் அர்ஷத் கூறும்போது, “எனக்கு ஏழுமலையானின் கருணையால் தான் அந்த உத்வேகமும், பலமும் வந்தது” என்றார்.

இதுகுறித்து தெலுங்கு தொலைக்காட்சி செய்தி சேனல்களில் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி தகவல் அறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, உடனடியாக அந்த காவலரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். பின்னர், திருமலைக்கு வரும் அனைத்து நடைபாதைகளிலும் மருத்துவ வசதியை உடனடியாக அதிகரிக்க வேண்டுமெனவும், ஆம்புலன்ஸ், வயர்லெஸ் சேவைகள் இருக்க வேண்டுமெனவும் சுப்பாரெட்டி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x