Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

4 மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

பஞ்சாப், குஜராத் உட்பட 4 மாநிலங்களில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலாக பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் இதுவரை சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இந்தவைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, துருக்கி, ரஷ்யாஆகிய நாடுகளில் இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் மக்களுக்கு அண்மை காலமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வரும் ஜனவரி மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘பாரத்பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும் முதல் கட்டமாக மக்களுக்கு செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்த தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்துவதற்கு முன்னதாக, இதற்கான ஒத்திகையில் ஈடுபட அனைத்து மாநிலங்களும் திட்டமிட்டுள்ளன. அதன்படி, முதல் கட்டமாக பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் இதற்கான ஒத்திகைப் பயிற்சியில் சுகாதாரத் துறையினர் அடுத்த வாரம் ஈடுபடவுள்ளனர்.

இதகுறித்து பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர்சிங் சித்து கூறுகையில், “பஞ்சாபில் 3 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெறும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒத்திகை நிகழ்வு நடைபெறும். இதுபோன்ற ஒத்திகை நடத்தப்பட்டால்தான், இதில் என்னென்ன சவால்கள் உள்ளன என்பதும், அதனை எப்படி களைய வேண்டும் என்பதும் தெரிய வரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x