Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

42 விவசாயிகளிடம் ரூ.40 லட்சம் ஏமாற்றிய மத்திய பிரதேச வியாபாரி வீடு ஏலம்: புதிய வேளாண் சட்டத்தின்படி நடவடிக்கை

புதிய வேளாண் சட்டங்களின்படி விவசாயிகளை ஏமாற்றிய வியாபாரியின் வீடு ஏலம் விடப்பட்டது.

கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் புதிய வேளாண் சட்டங்கள் அமல் செய்யப்பட்டன. ம.பி.யில் தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சந்தை நடைமுறைகளில் மாநில அரசு சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வட்ட அளவிலும் தலா 2 விவசாய சங்கங்களுக்கு குளிர்ப்பதன கிட்டங்கி வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் ம.பி.யின்பெரும்பாலான விவசாய சங்கங்கள் பங்கேற்கவில்லை. இந்த பின்னணியில் ம.பி.யில் மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது புதிய வேளாண் சட்டங்களின்படி விவசாயிகள் துணிச்சலாக புகார் அளித்து நிவாரணம் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குவாலியர் மாவட்ட ஆட்சியர் காஸ்லேந்திர விக்ரம் சிங் நிருபர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது:

குவாலியர் மாவட்டம், பிதாவர் வட்டம், பாஜ்னா கிராமத்தை சேர்ந்த வியாபாரி பல்ராம் சிங், அப்பகுதியை சேர்ந்த42 விவசாயிகளிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான வேளாண் விளைபொருட்களை வாங்கியுள்ளார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கான பணத்தை அவர் முறையாக வழங்கவில்லை. அந்த வியாபாரி மீது 23 விவசாயிகள் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், வியாபாரி குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். அவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புதிய வேளாண் சட்ட விதிகளின்படி வியாபாரியின் வீடு ஏலம் விட்டதில் ரூ.1.45 லட்சம் கிடைத்தது. இந்த தொகைபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் வியாபாரி பல்ராம் சிங்கின் நிலத்தையும் ஏலம்விட நடவடிக்கை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைத்துவிவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர் மீது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதன்மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x