Last Updated : 18 Dec, 2020 06:13 PM

 

Published : 18 Dec 2020 06:13 PM
Last Updated : 18 Dec 2020 06:13 PM

பிரதமர் மோடியின் வாரணாசி எம்.பி. அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்க விளம்பரம்: 4 பேர் கைது

பிரதமர் மோடி : கோப்புப்படம்

வாரணாசி

பிரதமர் மோடியின் வாரணாசி எம்.பி.அலுவலகத்தை ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் ஓஎல்எகஸ் (OLX) தளத்தில் விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் உள்ள ேபல்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் பிரதமர் மோடியின் எம்.பி. அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் ஜனசம்பார்க் கார்யாலயா அலுவலகத்தை (மக்கள் தொடர்பு அலுவலகம்) புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவேற்றேம் செய்து விற்பனைக்குத் தயாராக இருக்கிறது என்று சிலர் விளம்பரம் செய்தனர்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பாஜகவினர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, ஒஎல்எக்ஸ் தளத்தை அணுகி அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து வாரணாசி காவல் கண்காணிப்பாளர் அமித் பதக் கூறுகையில் “ ஜவஹர் நகர் பகுதியில் உள்ள பிரமதர்மோடியின் எம்.பி. அலுவலகத்தை சிலர் புகைப்படம் எடுத்து ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு விளம்பரம் செய்தனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தனிப்படை விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் 4 பேர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து அவர்களை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் எதற்காக பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்றார்கள், என்ன காரணம் என்பதை விசாரித்து வருகிறோ். விசாரணை முடிந்து விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x