Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் 10 நாள் வரை சொர்க்கவாசல் திறக்கலாம்: மந்திராலய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கருத்து

திருமலை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் வழியாக தரிசன ஏற்பாடு செய்திருப்பதில் தவறேதும் இல்லை என மந்திராலய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் நேற்று தெரிவித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பையும் தெரிவித்து வரும் நிலையில், மந்திராலம்  ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் மற்றும் அவரது சீடர்கள் திருமலையில் ஏழுமலையானை நேற்று தரிசித்தனர். மடாதிபதிக்கு கோயில் முகப்பு கோபுர வாசல் வழியே வரவேற்பு அளிக்கப்பட்டு, தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மடாதிபதிசுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சுவாமி  ராகவேந்திரரின் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையான் ஆவார். ஆதலால் இவருக்கும் ராகவேந்திர மடத்திற்கும் பலஆண்டுகளாக தொடர்பு நீடிக்கிறது.

இது என்றும் நீடிக்கும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தொடர்ந்து 10 நாட்கள்வரை சொர்க்க வாசல் திறந்திருக்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. பல்வேறு ஆகம வல்லுநர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகளின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்ட பின்னரே இதற்கான முடிவெடுக்கப்பட்டது. இதில் தவறேதும் இல்லை. பக்தர்களின் நலன் கருதியே இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானின் அருளாசியோடு கரோனா எனும் தொற்றிலிருந்து மனித இனம் நிரந்தரமாக மீள வேண்டுமென கோருகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x