Last Updated : 20 Oct, 2015 07:53 AM

 

Published : 20 Oct 2015 07:53 AM
Last Updated : 20 Oct 2015 07:53 AM

காவிரியில் நீர் திறந்து விட முடியாது: தமிழக அரசின் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயார்- கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் போதிய இருப்பு இல்லாததால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது. த‌மிழக அரசின் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கர்நாடக மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் திட்டவட்டமாக‌ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா வுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 45.327 டிஎம்சி நீரை கர்நாடகா தர மறுக்கிறது. இதனால் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர் கள் நீரின்றி வாடும் நிலை உருவாகி யுள்ளது. எனவே காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனே திறக்குமாறு கர்நாடகா வுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபிணி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. எனவே கோடை காலத்தில் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் கர்நாடக மக்கள் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மைசூரு, மண்டியா மாவட்ட பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்படாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி வறட்சி காலத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் போதிய இருப்பு இல்லாததால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்து விட முடியாது. இருப்பினும் தமிழக அரசு 45 டிஎம்சி நீரை திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த மனுவுக்கு கர்நாடகா தரப்பில் வரும் 26-ம் தேதி சட்ட ரீதியான உரிய பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழக அரசை சட்டப்படி எதிர்க்கொள்ள கர்நாடகா தயாராக உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய தடுப்பு அணைகள் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. கர்நாடக நீர்ப்பாசனத் துறை வல்லுநர்கள் திட்ட வரைவு தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டே அணை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது. இதற்கு பல வெளிநாட்டு நிறுவனங் கள் ஆர்வமுடன் பங்கேற்று ஒப்பந்தப்புள்ளிகளை கோரி யுள்ளன. திட்ட வரைவு பணிகள் இறுதி செய்யப்பட்டவுடன் மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். அதைத் தொடர்ந்து அணை கட்டும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x