Last Updated : 14 Dec, 2020 12:01 PM

 

Published : 14 Dec 2020 12:01 PM
Last Updated : 14 Dec 2020 12:01 PM

3-வது முறையாக இம்மாதத்தில் கரோனா தொற்று 30 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது: சிகிச்சை பெறுவோர் 3.52 லட்சமாகக் குறைவு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸால் நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இம்மாதத்தில் மூன்றாவது முறையாக 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. அதேபோல, 149 நாட்களுக்குப் பின் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3.52 லட்சமாகக் குறைந்தது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 ஆயிரத்து 71 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 98 லட்சத்து 84 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் 3-வது முறையாக நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 93 லட்சத்து 88 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.98 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 586 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 8-வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், புதிதாக 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் நிகர இடைவெளி 3 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 149 நாட்களுக்குப் பின் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.52 லட்சமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன் கடைசியாக ஜூலை 18-ம் தேதி 3.58 லட்சமாக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 336 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70 பேரும், டெல்லியில் 33 பேரும், கேரளா, மேற்கு வங்கத்தில் 47 பேரும், கேரளாவில் 29 பேரும், பஞ்சாப்பில் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 15 கோடியே 45 லட்சத்து 66 ஆயிரத்து 990 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x