Last Updated : 13 Dec, 2020 11:09 AM

 

Published : 13 Dec 2020 11:09 AM
Last Updated : 13 Dec 2020 11:09 AM

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 93.50 லட்சத்தைக் கடந்தனர்: பாதிப்பு 98.50 லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 93.57 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98.50 லட்சத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்தாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 254 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 98 லட்சத்து 57 ஆயிரத்து 29 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 93 லட்சத்து 57 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.93 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 546 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.62 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 391 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80 பேரும், டெல்லியில் 47 பேரும், கேரளா, மேற்கு வங்கத்தில் 44 பேரும், கேரளாவில் 32 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 31 பேரும், பஞ்சாப்பில் 21 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 15 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரத்து 833 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 434 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x