Published : 12 Dec 2020 12:01 PM
Last Updated : 12 Dec 2020 12:01 PM

பிரதமர் ஒருபோதும் விவசாயிகளின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டதில்லை: கபில் சிபல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் | கோப்புப் படம்.

புது டெல்லி 

பிரதமர் ஒருபோதும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டதில்லை. வேளாண் சட்டங்களுக்காக விரிவான உரையாடல் நடத்தவுமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், டெல்லி எல்லைகளில் இன்று 17-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றபின் அடுத்த பிரச்சினைகளை ஆலோசிக்கலாம் என்றும், வரும் 14-ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியதாவது:

''விவசாயிகள் கிளர்ந்தெழுகிறார்கள். பிரதமர் மக்களைப் பார்த்து சொன்னார், 'ஏதாவது சொல்லுங்கள், ஏதாவது கேளுங்கள்' என்று. ஆனால், 2014 முதல் மோடிஜி நீங்கள் எல்லாவற்றையும் சொன்னீர்கள். ஆனால் ஒருபோதும் விவசாயிகளின் குறைகளை நீங்கள் காதுகொடுத்துக் கேட்டதில்லை.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த பரிந்துரைகளை தங்கள் அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்து விரிவான உரையாடலையும் நடத்தவில்லை.

பெரும்பாலான சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மக்களவையில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால், அவை பற்றி நீங்கள் உண்மையில் கவலைப்படவில்லை''.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x