Last Updated : 10 Dec, 2020 03:37 PM

 

Published : 10 Dec 2020 03:37 PM
Last Updated : 10 Dec 2020 03:37 PM

மேற்கு வங்கத்தில் ஜே.பி. நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்: குண்டர்கள் ஆட்சிக்கு மாநிலம் சென்றுவிட்டது எனக் குற்றச்சாட்டு

பாஜக தலைவர்கள் வந்த கார் மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

டைமண்ட் ஹார்பர்

மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு குண்டர்கள் ஆட்சிக்கு சென்றுவிட்டது என்று ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று சென்றார்.

டைமண்ட் ஹார்பருக்குச் செல்லும் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டு, கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார் என்று பாஜக வட்டாரங்களும், நேரில் பார்த்தவர்களும் தெரிவித்தனர்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிதான் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தொண்டர்கள் மத்தியில் இன்று பேசியதாவது:

இன்று நான் பார்த்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியளித்தது. இதற்குமுன் எப்போதும் நடந்தில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லை.மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது.

இந்த தாக்குதலில் எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தேன். ஆனால் பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்.

துர்கா தேவியின் ஆசியால்தான் நான் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பாக வந்து பேசுகிறேன். மாநிலத்தில் கட்சித் தொண்டர்களை நினைக்கவே மிகவும் கவலையாக உள்ளது. .

மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த குண்டர்கள் ஆட்சியை நாம் தோற்கடிப்போம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டது.டைமண்ட் ஹார்பர் தொகுதியின் எம்.பி. தனது தொகுதியைக் கூட காணவராதது ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடு”

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் “ டைமண்ட் ஹார்பர் தொகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சாலையை மறித்து, நட்டாவின் வாகனம் மற்றும் மற்ற தலைவர்கள் வாகனத்தின் மீது கற்களை வீசிவிட்டு தப்பினர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் தெரிகிறது. என்னுடைய காரும் தாக்கப்பட்டது, பாதுகாவலர்கள் மீதும் தாக்குதல் நடந்தது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x