Published : 09 Dec 2020 06:07 PM
Last Updated : 09 Dec 2020 06:07 PM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: குடியரசுத் தலைவரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையீடு

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து பேசினர்.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை.வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இன்று (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

விவசாயிகள் அமைப்பினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், போக்குவரத்து பாதிப்பை நீக்கவும் ஒத்துழைக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அமித் ஷா வலியுறுத்தினார். மேலும் வேளாண்ட சட்டத்தில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று நடைபெற இருந்த 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரவும் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.

இதனை எழுத்து பூர்வமாக தருவதற்கு தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து பேசினர். ராகுல்காந்தி, சரத் பவார், சீத்தராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அனைவரும் கூடி ஆலோசித்தோம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து முறையிட்டோம். வேளாண் சட்டங்கள் தொடர்பாக எங்கள் கவலைகள், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மனு அளித்தோம். ’’ எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x