Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் உறுதி

வேளாண் விளைபொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்று மத்திய அமைச்சர்கள் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது:

புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் விவ சாயிகளுக்கு பலன் அளிக்கும். எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி, விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருகின்றன.

வேளாண் துறையில் சீர்த்திருத்தங்களை அமல்படுத்த புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல்அறிக்கையில் இதுபோன்ற வேளாண் துறை சீர்த்திருத்தங்கள் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சிஆட்சியில் இருந்தபோது ஒப்பந்தவேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அக்கட்சி இப்போது இரட்டை வேடம் போடுகிறது. அந்த கட்சியின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

வேளாண் விளைபொருட் களுக்கு விவசாயிகள் கூடுதல் விலை கோரினர். மத்திய அரசு விவசாயிகளுக்கு 50 சதவீத கூடுதல் தொகையை வழங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது.

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை, விவசாயிகள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வேளாண் சந்தையில் சீர்திருத்தங்கள் செய் யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் இப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டிவிட்டு வருகிறது.

மின்னணு வேளாண் சந்தையில் சுமார் 1.5 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர். 21 மாநிலங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவேளாண் சந்தைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் சுமார் ரூ.1.25 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறுகிறது.

புதிய வேளாண் சட்டங்களால் பிஹாரின் முசாபர்பூர் விவசாயிகள் லண்டனுக்கும், திரிபுரா விவசாயிகள் துபாய்க்கும் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். வேளாண் சந்தைகள் மூடப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, "நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வேளாண் துறை சீர்திருத்தங்களை ஆதரித்தது. இப்போது எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x