Last Updated : 06 Dec, 2020 02:22 PM

 

Published : 06 Dec 2020 02:22 PM
Last Updated : 06 Dec 2020 02:22 PM

விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் ஆதரவு: நாடுமுழுவதும் வரும் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு ஏற்கெனவே டிஆர்எஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் ஹேரா

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் ஹேரா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் ஆதரவு தெரிவி்க்கிறது. அன்றைய தினம் நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், போராட்டம் வெற்றிகரமாக நடத்த உறுதி செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி, கையெழுத்துப் பேரணி, விவசாயிகள் பேரணி ஆகியவற்றை நடத்தியுள்ளார்.

விவசாயிகள் படும் வேதனையை ஒட்டுமொத்த உலகமும் கவனித்துக்கொண்டிருக்கிறது. கடும் பனிக்காலத்தில் தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதையும், அவர்களின் கோரிக்கையை அரசு செவிசாய்க்கிறதா என்பதையும் உலகம் கவனிக்கிறது.

கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் , ஜூன் மாதமே வேளாண் சட்டத்துக்கான அவசரச்சட்டத்தை மத்திய அரசு வேகமாகக் கொண்டுவந்தது. ஒட்டுமொத்த தேசமும் கரோனா தடுப்பில் தீவிரமாக இருந்தபோது, பொருளாதார, சமூக, சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தபோது, அவர்களின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவுவதற்காக, இந்த அவசரச் சட்டங்களை கொண்டுவருவதில் அரசு தீவிரம் காட்டியது.

இந்த அவசரச் சட்டங்களை வேகமாகக் கொண்டுவருதற்கான அவசியம் என்ன, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை சஸ்பெண்ட் செய்துவிட்டு, சட்டத்தை நிறைவேற்றினார்கள். நாடாளுமன்ற விதிகளைப் பின்பற்றாமல், வேகமாக சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஏன் இந்த வேகம்.

உண்மையிலேயே விவசாயிகளின் நலனின் அக்கறை இருந்தால், இந்த மசோதாக்களை கொண்டுவரும் முன்பே அவர்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருக்கும். விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறவில்லை, அவர்களின் நலன் மீது அரசு ஒழிந்துகொண்டிருக்கிறது மத்திய அரசு.

அரசுக்கும், கார்ப்பரேட் நண்பர்களுக்கும் இடையிலான சதித்திட்டத்தில் விவசாயிகள் பலியாவதைப் பார்த்து வருகிறோம்.இதை விவசாயிகளும் உணர்கிறார்கள்

இவ்வாறு ஹேரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x