கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ : கோப்புப்படம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ : கோப்புப்படம்

‘தேவையற்ற கருத்து’: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்

Published on

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து தேவையற்றது. உண்மையை முழுமையாக அறியாமல் பேசியுள்ளார் என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

6-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தபோதிலும், நிபந்தனையற்ற பேச்சுக்கு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனடாவின் டொராண்டோ நகரில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட, சீக்கிய குரு, குருநானக் தேவின் 551-வது பிறந்தநாள் விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி மூலம் இன்று பங்கேற்றார். அப்போது ஜஸ்டின் பேசுகையில் “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால்,நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன்.

விவசாயிகள் போராட்டத்தை நினைத்து கவலைப்படுகிறேன். விவசாயிகளின் குடும்பத்தார், அவர்களின் நண்பர்களைப் பற்றி வேதனைப்படுகிறேன். பெரும்பாலனவர்களின் உண்மையான நிலை இதுதான் என்பது எனக்குத் தெரியும்.

அனுராக் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம்
அனுராக் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம்

நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், உரிமைகளுக்காக நீங்கள் அமைதியாகப் போராடும் போது, அதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அதனால்தான் பலவழிகள் மூலம் உங்கள் கவலைகளை இந்திய அதிகாரிகளுக்கு தெரியவிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டுத் தலைவர்கள் முழுமையான தகவல்களை அறியாமல் கருத்துக்களைத் தெரிவிப்பதை பார்க்கிறோம்.

அதிலும் குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றது. ராஜாங்கரீதியான பேச்சுகள், அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படாமல் இருப்பது சிறந்தது” எனத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in