Published : 09 Oct 2015 08:34 PM
Last Updated : 09 Oct 2015 08:34 PM

காவலாளி கொலை; பணக்காரர்கள் அகங்கார வெறி பிடித்து அலைகின்றனர்: உச்ச நீதிமன்றம் காட்டம்

கேரளாவில் உள்ள திருச்சூரில் குடியிருப்புக் காவலாளியை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் வர்த்தகர் மொகமது நிஷாமின் ஜாமின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் பணக்காரர்களை கடுமையாகச் சாடியது.

ஜனவரி 29-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில், நன்றாகக் குடித்து விட்டு தனது பணக்கார குடியிருப்பு நோக்கி காரில் வந்த வர்த்தகர் மொகமது நிஷாம், கதவைத் திறக்க காவலாளி சந்திர போஸ் தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியதோடு பிற்பாடு காரை ஏற்றிக் கொலை செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது.

கார் ஏற்றியதால் பயங்கர காயமடைந்த காவலாளி சந்திரபோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பிப்ரவரி 16-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மொகமது நிஷாம் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது ஜாமின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி தீபக் மிஸ்ரா ஜாமினை மறுத்துக் கூறும்போது, இந்த சம்பவம் நாட்டின் செல்வந்தர்கள் ஒட்டுமொத்தமாக எப்படி அகங்கார வெறியும், சுயமோக வெறியும் பிடித்து அலைகின்றனர் என்பதற்கு உதாரணம் என்று சாடினார்.

“வறுமை இங்கு முக்கியமான விவகாரம், வறுமையில் சுயமரியாதை உள்ளது” என்று கொல்லப்பட்ட காவலாளியின் வாழ்க்கையை குறிப்பிட்டு தீபக் மிஸ்ரா கூறினார்.

குற்றம்சாட்டப்பட்ட நிஷாம் ஜாமின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்திடம் நீதிபதி கூறும் போது, “ஒரே குடியிருப்பில் இருக்கின்றனர். ஒரு ஏழை காவலாளி மீது காரை ஏற்றியிருக்கிறார். அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று சாடினார்.

மேலும் வழக்கறிஞர் வாதாடிய போது, நிஷாம் ஒன்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் அல்லர். அன்று அவர் வண்டி ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்தார். அரசு தரப்பினர் கூறுவது போல் எனது கட்சிக்காரர் வேண்டுமென்றே காரை ஏற்றியிருந்தால் காவலாளி மருத்துவமனையில் 15 நாட்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டார். என்றார்.

“அவர் ஹிஸ்டரி-ஷீட்டரா இல்லையா என்பதல்ல இப்போதைய வழக்கு. இந்த குற்றம் நிகழ்த்தப்பட்ட விதமே இங்கு வழக்கு விசாரணை” என்று நீதிபதி மிஸ்ரா எதிர்வாதம் வைத்தார்.

கேரள அரசு சார்பாக வாதாடிய கபில்சிபல் கூறும்போது, "கதவை தாமதமாகத் திறந்ததற்காக காவலாளியை காரை ஏற்றிக் கொலை செய்த அராஜகத்தை கவனியுங்கள்” என்றார்.

இதனையடுத்து நீதிபதி மிஸ்ரா, வழக்கு விசாரணை நடைபெறும் திருச்சூர் சிறப்பு நீதிமன்றம் விரைவில் விசாரணகளை முடித்து ஜனவரி 2016-க்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 17 வரை சுமார் 104 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x