Published : 11 Nov 2020 05:24 PM
Last Updated : 11 Nov 2020 05:24 PM

அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

கட்டிட உள் அலங்கார வேலை செய்து வந்த நபர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரை உடனடியாக இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

தற்போது அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகக் கோரி மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் ஆகியோர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினர்.

இதையடுத்து அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அர்னாபின் ஜாமின் மனுவை விசாரித்தது.

நம் ஜனநாயகம் அசாதாரண நெகிழ்திறன் கொண்டது. மகாராஷ்டிரா அரசு அவர் தொலைக்காட்சியில் காட்டப்படுபவைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமர்வு கருதுகிறது.

நீதிபதி சந்திராசூட் கூறும்போது, “அவரது கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அவரது சேனலை இதுவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இதில் நீதிமன்றங்கள் இப்போது தலையிடவில்லை எனில் நாம் அழிவின் பாதையில் செல்வதாகவே அர்த்தம், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அர்னாபின் தனிநபர் சுதந்திரத்தை மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவருக்கு உடனடியாக இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x