Published : 21 Oct 2020 07:55 AM
Last Updated : 21 Oct 2020 07:55 AM

ஜாமீன், பரோல் நீட்டிப்பை நிறுத்தும் காலம் வந்துவிட்டது: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி

கரோனா பரவலை காரணம் காட்டி ஜாமீன், பரோல் நீட்டிக்கப்பட்டு வந்ததை நிறுத்தும் காலம் வந்துவிட்டது என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிறைகளில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீன், பரோலை நீட்டிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. அதன்படி, ஆயிரக்கணக்கான குற்றவாளிகளின் ஜாமீன், பரோல் காலம் முடிவடைந்த போதிலும், அவை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறு ஜாமீன் நீட்டிக்கப்படுவதை குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு டெல்லி சிறைத்துறை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் டெல்லி சிறைத்துறை டிஜிபி சார்பில் நேற்று பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், “டெல்லியில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகளை அடைக்கும் அளவைவிட அதிக அளவிலான கைதிகள்இருக்கின்றனர். எனவே, இந்தஜாமீன் நீட்டிப்பை நிறுத்த வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா பரவலை டெல்லி சிறைச்சாலைகள் முறையாக கட்டுப்படுத்தி வருவதாக அறிகிறோம். மேலும், சிறைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, ஜாமீன், பரோல் நீட்டிக்கப்படுவதை நிறுத்தும் காலம் வந்துவிட்டதாக கருதுகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான நீதிபதிகள் அமர்வு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x