Published : 20 Oct 2020 07:01 AM
Last Updated : 20 Oct 2020 07:01 AM

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது

புதுடெல்லி

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக் கம் செலுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களிலும் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் லோவி இன்ஸ்டிடியூட் ஆண்டு தோறும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டி யலை வெளியிட்டு வருகிறது. இதன் படி, 2020-ம் ஆண்டுக்கான 'லோவி இன்ஸ்டிடியூட் ஆசிய ஆதிக்க நாடு களின் குறியீடு' நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் மொத்தம் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 81.6 சதவீத புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 76.1 சதவீத புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. 41 சதவீத புள்ளிகளுடன் ஜப்பான் 3-வது இடத்திலும் 39.7 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன.

ரஷ்யா 33.5, ஆஸ்திரேலியா 32.4, தென்கொரியா 31.6, சிங்கப்பூர் 27.4, தாய்லாந்து 20.8, மலேசியா 20.7, இந்தோனேசியா 19.9, வியட்நாம் 19.2, நியூசிலாந்து 19, தைவான் 16.7, பாகிஸ்தான் 15.2, பிலிப்பைன்ஸ் 13.3, வடகொரியா 12.3, வங்கதேசம் 9.2, புருணே 9.1, மியான்மர் 8.7, இலங்கை 8.3, கம்போடியா 7.3, லாவோஸ் 6, மங்கோலியா 5.6, நேபாளம் 4.4, பப்புவா நியூ கினியா 3.8 என்ற சதவீத புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதுகுறித்து லோவி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹார்வி கூறியதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் அமெரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளா தாரச் சரிவில் இருந்து அமெரிக்கா மீண்டு வர சில ஆண்டுகள் ஆகலாம். வரும் 2024-க்குப் பிறகே அந்த நாடு மீட்சி அடைய வாய்ப்புள்ளது. சீனா நடப்பாண்டிலேயே பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொருளாதார ரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக சீனா உருவெடுக்கும். ஒருவேளை அமெரிக் காவை விட மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.

வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் ஆசிய நாடுகள், அமெரிக்கா வுடன் இணையாமல் தனித்து செயல் படக் கூடும். அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அமெரிக்கா வுடன் ஆசிய நாடுகள் விருப்பத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதிகரிக்கும் வறுமை

கரோனா வைரஸால் எழுந்த நெருக் கடியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிர்விளைவாக அண்டை நாடான சீனா எழுச்சி அடையும். கரோனா வைரஸால் எழுந்துள்ள நெருக்கடியால் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பது தாமத மாகும். தற்போது தெற்காசியாவில் வறுமை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். இவ்வாறு ஹார்வி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா குறித்த விளக் கத்தில், “இந்தியாவின் ராஜ்ஜியரீதி யான உறவுகள் மேம்பட்டுள்ளன. இதேபோல பாதுகாப்பு சார்ந்த கூட்டணிகள் வலுவடைந்துள்ளன. எனினும் இந்தியாவின் வர்த்தக தொடர்புகள் பின்னடைவை சந்தித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x