Published : 14 Oct 2020 04:36 PM
Last Updated : 14 Oct 2020 04:36 PM
கோவிட் தொற்றுநோய் உலகளாவிய ஒத்துழைப்பின் அதிக அளவிலான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுளளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா மூன்று நாட்டு தூதர்களுடன் இணையதளம் மூலம் மெய்நிகர் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவிட்சர்லாந்தின் தூதர் ரால்ப் ஹெக்னர், மால்டாவின் துணைத் தூதர் ரூபன் காவுசி மற்றும் போட்ஸ்வானாவின் துணைத் தூதர் கில்பர்ட் ஷிமானே மங்கோல் ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் அவர்கள் மூவரும் தங்கள் நாடுகளின் சார்பாக தகுதி சான்றிதழ்களை குடியரசுத் தலைவருக்கு வழங்கினர். தூதர்களிடமிருந்து தகுதி சான்றிதழ்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியதாவது:
''மூன்று நாடுகளுடனும் இந்தியா அன்பான மற்றும் நட்பான உறவுகளை பெற்று வருகிறது. அமைதி மற்றும் செழிப்பு பற்றிய பொதுவான பார்வையில் இந்த உறவுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. 2021-22 காலத்திற்கான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆதரித்ததற்காக தங்கள் அரசாங்கங்களுக்கு நன்றி.
சர்வதேச சமூகம் விரைவில் தொற்றுநோய்க்கு வலுவான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து செயல்படவும், சுகாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அதிக உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தை கோவிட் -19 தொற்றுநோய் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT