Last Updated : 13 Oct, 2020 08:37 AM

 

Published : 13 Oct 2020 08:37 AM
Last Updated : 13 Oct 2020 08:37 AM

குஷ்பு மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக: ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோபமும் வியூகமும் கைகொடுக்குமா?

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்புவை சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதற்காக பயன்படுத்த அக்கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.

பாஜகவில் நேற்று இணைந்த நடிகை குஷ்பு, தனக்கு தேசிய அளவில் அல்லது மாநில அளவில் முக்கிய பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பாஜக மேலிடம் இதை ஏற்கவில்லை. அதேநேரத்தில் குஷ்புவை சேர்த்ததற்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசியலை கவனிக்கும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

குஷ்பு பிறப்பால் இஸ்லாமியர். அவர் பொதுவெளியில் மத நம்பிக்கை அற்றவராக காட்டிக் கொண்டாலும், அவரை வைத்து சிறுபான்மையினர் மத்தியில் பாஜகவை கொண்டு செல்ல வேண்டும். பிரபலமான நடிகை என்பதால் அவரை நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம். எதிர்க்கட்சிகளை சூடாக விமர்சிப்பதிலும் துணிச்சலாக கருத்துகளை சொல்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே, ஊடகங்களில் பேச அவரை முன்னிறுத்தலாம்.

குஷ்புவுக்கு தனியாக வாக்கு வங்கி இல்லை. கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை அவர் க‌டுமையாக விமர்சித்துள்ளார். மூத்த ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் அதையெல்லாம் மறக்கவில்லை. எனவே, குஷ்புவுக்கு உடனடியாக பெரிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என பாஜக மேலிடத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள குஷ்புவையும், முத்தலாக் புகார்தாரர் சாய்ரா பானு ஆகியோரைக் கொண்டு சிறுபான்மையினரின் வாக்குகளை கவர பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது. இருவரும் தேசிய அளவில் அறியப்பட்டவர்கள் என்பதால் பாஜக இஸ்லாமியருக்கு எதிரான‌கட்சி இல்லை என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதிலும், குஷ்புவை வைத்து தமிழகத்தில் பாஜக மதவாத கட்சி அல்ல எனவும், இஸ்லாமிய பெண்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சி எனவும் பிரச்சாரம் செய்ய வியூகம் வகுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 12 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் சிறுபான்மையின மக்கள் உள்ளனர். சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட‌தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் சிறுபான்மையினர் இருக்கின்றனர். தமிழக பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து குஷ்பு களமிறக்கப்படுவார் என மேலிட நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ‘நாடு முழுக்க கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய அளவில் பதவி வழங்க வேண்டும்' என பாஜக மேலிடத்திடம் குஷ்பு உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். இதனால் தேசிய அளவிலான மகளிர், சிறுபான்மையினர், கலை, ஊடகம், சமூக வலைதளம் உள்ளிட்ட கட்சியின் கிளை‌ப் பிரிவுகளில் அவருக்கு பொறுப்பு வழங்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x