Last Updated : 12 Oct, 2020 11:09 AM

 

Published : 12 Oct 2020 11:09 AM
Last Updated : 12 Oct 2020 11:09 AM

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 61 லட்சமாக உயர்வு: தொற்று 71 லட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 66 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 66 ஆயிரத்து 732 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61 லட்சத்து 49 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 86.36 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 853 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12.10 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 816 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.53 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 8 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 93 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 951 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 309 பேர், கர்நாடகாவில் 75 பேர், தமிழகத்தில் 65 பேர், மேற்கு வங்கத்தில் 59 பேர், உத்தரப் பிரதேசத்தில் 41 பேர், பஞ்சாப்பில் 35 பேர், ஆந்திராவில் 30 பேர், டெல்லியில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 10-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x