

சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத் திருத்தங்கள் பற்றி விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஆனால் எதிர்க்கட்சிகள்தான் அவர்களை குழப்புகின்றனர், இது பொறுப்பற்ற அரசியல் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
சட்ட திருத்தத்தால், நமக்கு நன்மை தான் என, விவசாயிகள் நன்கு புரிந்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தவறாக கூறி, அவர்களை குழப்பி, பொறுப்பில்லாமல் அரசியல் செய்கின்றனர்.சட்ட திருத்தங்கள் வாயிலாக, இனி, வேளாண் பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும். இதனால், பொருளாதார வளர்ச்சியில், முன்னேற்றம் ஏற்படும். தமிழகத்தில், கரும்பு விவசாயிகளுக்கு பிரச்னை உள்ளது.இது தொடர்பாக, நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்.
மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கை, நீண்ட காலமாக நிலுவை யில் இருந்தது. இந்த சட்டங்களில், தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை, யாருக்கு வேண்டு மானாலும் விற்பனை செய்ய முடியும்.
உள்ளூர், வெளி மாநிலம் என, எங்கேயும் விற்பனை செய்யலாம்.அதற்கு என்ன விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற உரிமையும், சுதந்திரமும், இந்த சட்டங்களின் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசின் ஒழுங்குமுறை சந்தைகளில், விவசாய பொருட்களை விற்பனை செய்தால், 8.5 சதவீத வரி, விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும்.இந்த சந்தைகளைத் தவிர்த்து, வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்த தேவைஇல்லை, இதனால், அவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் செய்த திருத்தங்கள் வாயிலாக, பொருட்களின் விலை உயராது.
இதனால், பொது மக்களுக்கும், நுகர்வோருக்கும் எந்த பாதிப்பு ஏற்படாது. 25 ஆண்டுகளாக, வேளாண் நிபுணர்கள் கூறி வந்த மாற்றங்கள், தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் நடைமுறை தொடரும்.முந்தைய ஆட்சிகளில், நெல் மற்றும் கோதுமைக்கு மட்டுமே, ஆதார விலை வழங்கப்பட்டு வந்தது.
குறைந்தபட்ச ஆதார விலை பட்டியலில் உள்ள, இதர, 20 பயிர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது கேழ்வரகு, கடலை, பருப்பு வகைகள் உட்பட, பட்டியலில் உள்ள அனைத்திற்கும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.பேச்சுகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், 'வேளாண் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்' என, கூறப்பட்டு உள்ளது. அதை, தற்போது மேற்கொண்டபோது, அவர்கள் எதிர்க்கின்றனர், மக்களை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.