Published : 07 Oct 2020 07:54 AM
Last Updated : 07 Oct 2020 07:54 AM

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உ.பி. அரசு கோரிக்கை; ஹாத்ரஸ் பெண் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது: பொதுநல மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் கருத்து

ஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என உ.பி.அரசு கோரியுள்ளது

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்திர பான் சிங் மற்றும் 100 பெண் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர் சத்யாமா துபே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங், பிரதீப் குமார் யாதவ், சஞ்சீவ் மல்ஹோத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, "உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் நியமிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கோரினார்.

உத்தர பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அவர் கூறும்போது, "உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நேர்மையாக விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று கோரினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியதாவது:

ஹாத்ரஸ் வழக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்காக வாதாட வழக்கறிஞரை தேர்வு செய்து விட்டார்களா என்பதை கேட்டறிந்து நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களை உத்தர பிரதேச அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஹாத்ரஸ் வழக்கு நடைபெறுவது குறித்த பரிந்துரைகளை அனைத்து தரப்பினரும் அளிக்கலாம். அதன் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும். ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x