Published : 06 Oct 2020 09:04 PM
Last Updated : 06 Oct 2020 09:04 PM

கேரளாவில் இன்று 7,871 பேருக்குத் தொற்று, 25 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் தகவல் 

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 7,871 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 25 பேர் மரணம் அடைந்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியது:

''கேரளாவில் இன்று 7,871 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய சராசரியை ஒப்பிடும்போது நோயைக் கட்டுப்படுத்துவதில் கேரளா சிறப்பான நிலையில் உள்ளது. தேசிய அளவில் டெஸ்ட் பாசிட்டிவ் சதவீதம் 8.3 ஆகும். கேரளாவில் இது 7.2 சதவீதமாகும். நாம் இதுவரை மிகவும் கவனமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். அரசும், மக்களும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். இனியும் இதைத் தொடர வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் நோய்ப் பரவல் அதிகரிக்கும் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

எல்லா மாவட்டங்களிலும் நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சந்தைகள் மற்றும் பொது இடங்களில் கரோனா நிபந்தனைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனாலும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் நடத்தப்படும்.

டெஸ்ட் பாசிட்டிவிட்டி விகிதத்தை 10-க்குக் கீழே கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்படும். கேரளாவில் எத்தனை பேருக்கு நோய் வந்து சென்றது என மத்திய சுகாதாரஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தியதில் கேரளாவில் 0.8 சதவீதம் பேருக்கு நோய் வந்து சென்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதில் தேசிய சராசரி 6.6 ஆகும்.

மே மாதத்தில் தேசிய சராசரி 0.7 சதவீதமாக இருந்தது. தற்போது 6.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 9 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கேரளாவில் 0.33 சதவீதத்தில் இருந்து 0.8 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. தேசிய மக்கள் நெருக்கத்தை விட கேரளாவில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாகும். இங்கு வயதானவர்களும் அதிக அளவில் உள்ளனர். ஆனாலும் நோய்ப் பரவல் கேரளாவில் குறைவாக இருப்பது நமது சுகாதாரத் துறையின் சாதனையாகக் கருதப்படுகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, தொற்று நோய்ப் பரவல் சட்டத்தை மீறுவோருக்கு அபராதத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோய்ப் பரவலில் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இருப்பவர்களில் 854 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 845 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 837 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 757 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 736 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 545 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 520 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 427 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 424 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 416 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 330 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 135 பேர் வயநாடு மாவட்டத்தையும், 56 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 25 பேர் இன்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 146 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 6,910 பேருக்கு இன்று நோய் பரவி உள்ளது. 640 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என்று தெரியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 892 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இன்று சுகாதாரத் துறையை சேர்ந்த 111 பேருக்கும் நோய் பரவி உள்ளது. இதில் கண்ணூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 32 பேருக்கு நோய் பரவி உள்ளது.

நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 4,981 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,54,092 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 87,738 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 60,494 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,63,094 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,33,703 பேர் வீடுகளிலும், 29,391 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 2,444 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 32,63,691 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 2,09, 482 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x