Published : 02 Oct 2020 08:03 AM
Last Updated : 02 Oct 2020 08:03 AM

குஜராத்தின் 12 மணிநேர பணி ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கியுள்ள பொருளாதார நடவ டிக்கைகளை ஊக்குவிப்பதற் காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் ஒரு நடவடிக்கையாக, குஜராத் அரசு கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர்களின் பணி (ஷிப்ட்) நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ள தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக குஜராத் மஸ்தூர் சபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் குஜராத் அரசின் 12 மணிநேர அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் தொழிலாளர்கள் மீது சுமை சுமத்தக் கூடாது. இது பொருத்தமான பதில் நடவடிக்கை அல்ல. வேலைவாய்ப்பு மற்றும் நியாயமான ஊதியத்துக்கான உரிமை என்பது வாழும் உரிமையின் ஒரு பகுதியாகும். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, சட்டத்தின் தேவையை விலக்கி வைத்து,அவசரநிலை பிறப்பிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பை, தேசப்பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாககருத முடியாது” என கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x