Published : 02 Oct 2020 06:42 AM
Last Updated : 02 Oct 2020 06:42 AM

உலகின் மிக நீளமான ‘அடல்’ குகைப் பாதை: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

புதுடெல்லி

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான 'அடல்' குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தின் மணாலி - லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் 9.02 கி.மீ. தொலைவுக்கு குகைப் பாதை அமைக்க கடந்த 2010 ஜூன் 28-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆறு ஆண்டுகளில் குகைப் பாதையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மலையை குடைந்து குகைப் பாதை அமைக்கப்பட்டதால் சாலை பணி நிறைவடைய 10 ஆண்டுகளாகி உள்ளது. இது உலகின் மிக நீளமான குகைப் பாதையாகும்.

இந்த குகைப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக 'அடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தெற்கு முனை மணாலியில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் வடக்கு முனை லாஹாவ் பள்ளத்தாக்கின் சிஸ்ஸு பகுதி, டெலிங் கிராமம் அருகேயும் அமைந்துள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள 'அடல்' குகைப் பாதை மூலம் இமாச்சல பிரதேசத்தின் மணாலி - லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம், 4 மணி நேரம் வரை குறையும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 6 மாதங்கள் வரை போக்குவரத்து தடைபடும்.

`அடல்' குகைப் பாதை மூலம் இனிமேல் ஆண்டு முழுவதும் எவ்வித தடையும் இன்றி போக்குவரத்து நடைபெறும். இமாச்சல பிரதேசம், லடாக் பகுதிகள் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. எனவே `அடல்' குகைப் பாதை ராணுவரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாதையில் தினமும் 3,000 கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

'அடல்' குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் திறந்து வைக்கிறார். இதையொட்டி இமாச்சல பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குர் கூறும்போது, "அடல் குகைப் பாதையை திறந்து வைக்க வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். குகைப் பாதையை திறந்து வைத்த பிறகு 2 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார். கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x