Published : 03 Sep 2015 07:11 PM
Last Updated : 03 Sep 2015 07:11 PM
கர்நாடகாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் மரணத்தை நியாயப்படுத்தும் வகையிலும், கொலையாளிகளை பாராட்டும் வகையிலும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்ட மங்களூரு மாவட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மூடநம்பிக்கைக்கு எதிராக பேசிய மூத்த கன்னட எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி (77) கடந்த 30-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இதில் பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில் மங்களூரு மாவட்டம் பண்டுவால் பகுதி பஜ்ரங் தளம் அமைப்பின் இணை செயலாளர் புவித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்புர்கியின் படுகொலையை வரவேற்று பதிவிட்டு இருந்தார். மேலும், “அப்போது யு.ஆர்.அனந்தமூர்த்தி; இப்போது எம்.எம். கல்புர்கி; அடுத்த இலக்கு கே.எஸ்.பகவான்'' என பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து மங்களூரு போலீஸார் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்து 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் புவித் ஷெட்டி நேற்று முன் தினம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே மங்களூரு மாவட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டவார் கல்புர்கியின் மரணத்தை இனிப் புகள் வழங்கி கொண்டாடியுள் ளார். மேலும் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கலபர்கி படுகொலையை நியாயப் படுத்தியும், கொலையாளிகளை பாராட்டியும் பதிவிட்டு இருந்தார். பிரசாத் அட்டவாரின் கருத்துக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து, பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிழல் உலக தாதாவின் நண்பர்
இதையடுத்து மங்களூரு காவல் ஆணையர் எஸ். முருகன் தலைமையிலான போலீஸார் பிரசாத் அட்டவாரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்புர்கியின் மரணத்தை கொண்டாடியது ஏன்? எழுத்தாளரின் கொலைக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்ட பிரசாத் அட்டவர், கடந்த 2009-ம் ஆண்டு மங்களூரு கேளிக்கை விடுதியில் பெண்களை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்.
மேலும் மும்பை மற்றும் கடலோர கர்நாடகாவில் பெரிய நிழலுலக தாதாவாக வலம் வரும் ரவி பூஜாரியின் நெருக்கமான நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
வரைபடம் வெளியீடு
சிஐடி போலீஸார் கல்புர்கியின் வீடு அமைந்துள்ள கல்யாண்நகர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் குற்றவாளிகள் மிக வேகமாக வண்டி ஓட்டி சென்றதை பார்த்ததாக இருவர் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள சாலை, கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்தனர்.
ஹிரமரலூர் ஈஸ்வரன் அறிவியல் பி.யூ. கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கல்புர்கியை கொன்றவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் பைக் பதிவாகியுள்ளது. இதன் காட்சிகள் தெளிவாக இல்லாததால், பதிவு எண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சிசிடிவி காட்சிகளை தொழில்நுட்ப அலுவலகத்துக்கு அனுப்பி, படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கல்புர்கியின் வீட்டில் சிதறிய தோட்டாக்களை சேகரித்து தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கொலையாளிகளை நேரில் பார்த்த கல்புர்கியின் மனைவி உமா தேவி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஹூப்ளி- தார்வாட் போலீஸார் சந்தேகிக்கப்படும் 2 கொலையாளிகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT