Published : 10 Sep 2015 09:41 AM
Last Updated : 10 Sep 2015 09:41 AM
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது வரும் அக்டோபர் 12-ம் தேதி விசாரணை தொடங்க வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 23-ம் தேதி கர்நாடக அரசு தரப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 12-ம் தேதி நடைபெற வாய்ப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. அன்றைய தினமே வழக்கின் வாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT