Published : 24 Aug 2020 08:31 PM
Last Updated : 24 Aug 2020 08:31 PM

கரோனா பரிசோதனை; மொத்தம் 3.6 கோடி எண்ணிக்கையை தாண்டியது

இந்தியா தொடர்ந்து முன்னேறி மொத்தம் 3.6 கோடி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது

10 லட்சம் பேரில் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் என்ற விகிதம் உச்சபட்சமாக 26,016 என்ற எண்ணிக்கையில் உள்ளது

கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிப்பது, உரிய காலத்தில் தீவிரமாகப் பரிசோதனை செய்து நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதே ஆகும். உரிய காலத்தில் உடனடியாக, இவ்வாறு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது, அவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களுக்குப் பயனுள்ள முறையில் சிகிச்சை அளிப்பது, ஆகியவற்றின் காரணமாக, குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதோடு, தொடர்ந்து குறைந்தும் வருகிறது.

இந்தியாவில் இதுவரை 3 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 137 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 917 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியா தனது பரிசோதனைத் திறன் வசதிகளை மேலும் அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது.

நாடு முழுவதும் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் விரிவுபடுத்தப்பட்டு, பரிசோதனை எளிதில் நடத்த வசதி செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கவனமுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, 10 லட்சம் பேரில் எத்தனை பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்ற விகிதம் (டி பி எம்) வெகுவாக அதிகரித்து 26016 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. டிபிஎம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாளொன்றுக்கு எடுக்கப்படும் டிபிஎம் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொடர்பாக “பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளைப் பொருத்திக் கொள்வதற்காக, பொது சுகாதார முறைகள்” என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவுரை அறிக்கையின் ஆலோசனைப்படி, இந்தப் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள அறிவுரையின்படி கோவிட்-19 நோய் உள்ளதா என்ற ஐயம் உள்ள பகுதிகளில் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில், நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பரிசோதனை ஆய்வுக் கூடங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது, பரிசோதனை உத்திகளில் முக்கிய அம்சமாக உள்ளது. தற்போது, நாட்டில் மொத்தம் ஆயிரத்து 520 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. 984 ஆய்வுக்கூடங்கள் அரசு பிரிவிலும், 536 தனியார் ஆய்வுக் கூடங்களும் உள்ளன. விவரங்கள் வருமாறு:

· ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 785 (அரசு 459 தனியார் 326 )

· ட்ரு நெட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 617 (அரசு 491 தனியார் 126)

· சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 118 (அரசு 34 தனியார் 84)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x