Published : 22 Aug 2020 08:26 AM
Last Updated : 22 Aug 2020 08:26 AM

பிரணாபுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்

புதுடெல்லி

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. அவரது ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு உள்ளிட்டவை சீராக உள்ளன. அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x