Published : 20 Aug 2020 08:10 AM
Last Updated : 20 Aug 2020 08:10 AM

திவால் நடவடிக்கைக்கு பயந்து கடனை திரும்ப செலுத்திய நிறுவனங்கள்: ரூ.3.7 லட்சம் கோடி மதிப்பு வழக்குகளில் தீர்வு

மத்திய அரசு கொண்டு வந்த புதிய திவால் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து 9,650 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மொத்த மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடியாகும்.

தேசிய சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) முன்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. என்சிஎல்டி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிறுவன மேம்பாட்டாளர்கள் தங்களது பிரச்சினையை சமரசமாக தீர்த்துக் கொண்டுள்ளனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் பதிவான வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்கள், நிறுவனத் தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்ட கடன் தொகையை அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கையை தவிர்த்துள்ளனர் என்று திவால் சட்ட வாரியம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திவால் சட்ட மசோதா (ஐபிசி) நடவடிக்கையை செயல்படுத்தும் முன்பாக இதில் தொடர்புடைய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை மறு ஏலம் விட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனர்கள் தங்கள் நிறுவனத்தில் தங்களுக்குள்ள உரிமையை இழக்க விரும்பவில்லை. இதன் காரணமாக ஐபிசி நடவடிக்கை எடுக்கும் முன்பாக கடனை செலுத்தி நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் என்சிஎல்டி-யில் அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,100 ஆகும். இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.83,000 கோடி. இதில் வீட்டுக் கடன் வழங்கிய நிறுவனங்களும் அடங்கும். என்சிஎல்டி-யில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட (பதிவு செய்யப்பட்ட) வழக்குகளின் நிலுவைத் தொகை ரூ.3.8 லட்சம் கோடியாகும். இதில் 46 சதவீத அளவுக்கு தொகைகள் சமரசமாக தீர்வு செய்யப்பட்டுள்ளன. அதாவது கடன் வழங்கும் நிறுவனங்கள் 54 சதவீத அளவுக்கு தங்களுக்குத் திரும்ப வேண்டிய தொகையை தள்ளுபடி (குறைத்து) செய்துள்ளன. இது திவால் நடவடிக்கைக்கான மதிப்பில் இரு மடங்குக்கு சற்று குறைவாகும். அதாவது மொத்த மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி என்று ஐடிபிஐ வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நிலுவையில் 221 வழக்குகள் உள்ளன. இவற்றிலும் சமரச தீர்வு எட்டப்பட்டால் அதன் மூலம் தீர்க்கப்படும் தொகையின் அளவு அதிகரிக்கும் என்று இத்துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை மூலம் தீர்வு எட்டப்படுவதை அனைவரும் உணரும்போது திவால் நடைமுறைக்குப் பதிலாக சமரச தீர்வு காணும் போக்கு அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது உருவாகியுள்ள கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சொத்து மதிப்பு குறைந்துள்ளது சமரச தீர்வு எட்டப்படுவதில் மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது நிலுவையில் உள்ள 221 வழக்குகளில் இதுவரை 415 நாட்கள் முடிவடைந்துள்ளன.

ஓராண்டுக்குள் அதாவது 365 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். ஆனால் முந்தைய சட்டத்தில் தீர்வு கிடைக்க குறைந்தது நான்கு ஆண்டுகளானது குறிப்பிடத்தக்கது. தற்போது தீர்வு காணப்பட்ட வழக்குகள் அனைத்தும் 309 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளதாக ஐபிசி அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x