Published : 19 Aug 2020 03:08 PM
Last Updated : 19 Aug 2020 03:08 PM

34 பயணிகளுடன் தனியார் பேருந்தை மடக்கிக் கடத்திய  ‘பைனான்ஸ் கம்பெனி’ ஏஜெண்ட்கள்: ஆக்ராவில் பரபரப்பு

ஆக்ரா எஸ்.எஸ்.பி. பப்லூ சிங்.

புதன் கிழமை காலை ஆக்ராவில் பரபரப்பான நிஜ நாடகம் ஒன்று அரங்கேறியது. 34 பயணிகளுடன் மத்தியப் பிரதேசம் போகும் பஸ் ஒன்றை ’பைனான்ஸ் கம்பெனி ஏஜெண்ட்கள்’ என்று கூறிக்கொண்ட சில நபர்கள் கடத்திச் சென்றனர்.

பேருந்தின் 2 நடத்துனர்கள், ஓட்டுநர் வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்டனர். உடனே பஸ்ஸை நிறுத்தி ஓட்டுநர், நடத்துனர்களை இறக்கிவிட்ட மர்ம நபர்களில் ஒருவர் பேருந்தை 34 பயணிகளுடன் கடத்திச் சென்றார். சில மணி நேரங்கள் கழித்து சுமார் 250 கிமீ தொலைவில் ஜான்சியில் பேருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டனர் என்று ஆக்ராவின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தல் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால் இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை. பஸ் கடத்தப்பட்ட பிறகு போலீஸார் தனிப்படை அமைத்து தேடினர். அண்டை மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்துக்கு விஷயம் வர பயணிகள் பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஆக்ரா எஸ்.எஸ்.பி. பாப்லு குமார் கூறும்போது, “தனியார் பேருந்தின் நடத்துனர்களும் ஓட்டுநர்களும் எங்களிடம் புகார் அளிக்க வந்தனர். அதாவது தங்கள் பேருந்தை ‘பைனான்ஸ் கம்பேனி ஏஜேண்ட்கள்’ கடத்திச் சென்றதாக தெரிவித்தனர். பேருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவுக்குப் போக வேண்டியது. ஆனால் காலை 4 மணிக்கு பேருந்தை ஓவர்டேக் செய்தது கார் ஒன்று.

பேருந்துக்கான கடன் நிலுவைகள் கட்டப்படவில்லை எனவே பஸ்ஸை பறிமுதல் செய்கிறோம் என்று காரில் இருந்து இறங்கிய நபர்கள் தெரிவித்தனர். ஓட்டுநரையும் நடத்துனரையும் விட்டு விட்டு குற்றவாளிகளில் ஒருவன் பேருந்தை பயணிகளுடன் கடத்திச் சென்றான். பிறகு ஜான்சியில் அவர்கள் பத்திரமாக இருப்பது தெரியவந்தது” என்றார் அவர்.

மஹீந்த்ரா சைலோ காரில் பஸ்ஸை பின் தொடர்ந்து வந்தவர்கள் ஆக்ரா எல்லையைக் கடந்ததும் ஒவர் டேக் செய்து பஸ்ஸை நிறுத்தினர். இறங்கிய நால்வரும் தாங்கள் குவாலியரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். ட்ரைவருக்கும் கண்டெக்டருக்கும் ரூ.200 உணவுக்காக அளித்துள்ளனர். பிறகு பேருந்தை ஒருவர் கடத்திச் சென்றார்.

ஒரு குற்றவாளி பஸ் கம்பெனியின் கணக்கு வழக்குகளை நன்கு அறிந்தவர் என்று ஓட்டுநரும் நடத்துனரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

பயணிகள் மீட்கப்பட்டது போலீஸாருக்கு நிம்மதியை அளித்திருந்தாலும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தாமதமாகி வருகிறது. இந்தச் சம்பவம் முதல்வர் வரைச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x