Published : 18 Aug 2020 07:56 PM
Last Updated : 18 Aug 2020 07:56 PM

4.60 கோடி சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: நக்வி தகவல்

கடந்த ஆறு ஆண்டுகளில் 4 கோடியே 60 லட்சம் சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உறுதிசெய்யப் பட்டுள்ளதாக முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மெச்சத்தகுந்த இளைஞர்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் என்ற லட்சியத்துக்கான அரசின் உறுதியான, சிறந்த முயற்சிகளின் பலனாக, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை, நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் 22 இளைஞர்கள், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் நடத்தும் நய்உடான் இலவசப் பயிற்சித்திட்டத்தின் உதவியுடன் பெருமைமிகு சிவில்சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் இலவசப்பயிற்சித்திட்டத்தின் உதவியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற சிறுபான்மை சமுதாய இளைஞர்களை அந்த்யோதயா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டிய நக்வி, சிறுபான்மை சமுதாயத்தில் திறமைக்குப் பஞ்சமில்லை என்று கூறினார். ஆனால், முன்பு, சிறுபான்மை சமுதாய இளைஞர்களிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணரும் சூழலை ஏற்படுத்த எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

சிறுபான்மை சமுதாய இளைஞர்களின் திறமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான சூழலை அரசு அளித்துள்ளதாக நக்வி கூறினார். இந்த ஆக்கபூர்வமான அணுகுமுறை காரணமாக, இந்த உயரிய நிர்வாகப் பணிகளுக்கு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தஆண்டிலும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த145 இளைஞர்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று

ஆண்டுகளாக, இந்தத் தேர்வில், இதுபோன்ற ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காண முடிந்துள்ளது. மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயம் மற்றும் இதர நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்று நக்வி கூறினார்.

2014-க்கு முன்பு, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 2 கோடியே 94 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது எனக் கூறிய நக்வி, ஆனால், தற்போதைய அரசின் உள்ளார்ந்த அதிகாரமளித்தல் முன்முயற்சியின் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளில், 4 கோடியே 60 லட்சம் சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த உதவித்தொகை பெற்ற பயனாளிகளில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள் என நக்வி தெரிவித்தார். பிரதமர் மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில், நாடு முழுவதும் நலிவடைந்த சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 34,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நக்வி தெரிவித்தார்.

2014-க்கு முன்பு இத்தகைய திட்டங்கள் 22,000 மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. 2014-க்கு முன்பு, நாட்டின் 90 மாவட்டங்கள் மட்டுமே சிறுபான்மை சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு இதனை நாட்டின் 308 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x