Last Updated : 18 Aug, 2020 01:53 PM

 

Published : 18 Aug 2020 01:53 PM
Last Updated : 18 Aug 2020 01:53 PM

உத்தராகண்ட் அமைச்சரின் பண்ணை வீட்டில் 30,000 மீன்கள் திருட்டு: பரேலியின் தனிப்படையினரால் குற்றவாளிகளுக்கு வலை

மாநில அமைச்சர் ரேகா ஆர்யா.

புதுடெல்லி

உத்தராகண்ட் மாநில ஆளும் பாஜக-வின் அமைச்சரின் உத்திரப்பிரதேசப் பண்ணை வீட்டில் 30,000 மீன்கள் திருடப்பட்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்க தனிப்படை அமைத்து பரேலி போலீஸார் குற்றவாளிகளை தேட வலை வீசப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தின் இணை அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா. இவரது பண்ணை வீடு அதன் எல்லையில் அமைந்துள்ள உ.பியின் பரேலியில் இஸ்ஸத் நகர் கிராமத்தில் உள்ளது.

இப்பண்ணை வீட்டில், அமைச்சர் ரேகா பல வருடங்களாக மீன்களையும் வளர்த்து வருகிறார். இவற்றை பணியாளர்களை வைத்து பராமரித்துவரும் ரேகா, தனது கணவர் கிரிதர் லால் சாஹுவுடன் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.

இதுபோல் நேற்று முன் தினம் வந்தவர்கள், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது மீன் குளத்தில் நீர்வற்றி காய்ந்த நிலை காணப்பட்டுள்ளது. இதில் இருந்த சுமார் 30,000 மீன்களில் ஒன்றுகூட இல்லை.

இதனால், அமைச்சர் ரேகா சார்பில், பரேலியின் இஸ்ஸத்நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து துணை ஆய்வாளரான சித்தார்த்நாத் கோஸ்வாமி தலைமையில் தனிப்படை அமைத்த பரேலி போலீஸார், அமைச்சர் ரேகாவின் மீன்களை தேடி வருகின்றனர்.

இந்த மீன் பண்ணையில் மேலாளராகப் பணியாற்றிய விஷ்ராம் என்பவர் மீது சந்தேகம் கொண்ட போலீஸார் அவருக்கு வலைவீடித் தேடி வருகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் துணை ஆய்வாளர் கோஸ்வாமி கூறும்போது, பரேலி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களின் மீன் சந்தைகளில் எங்கள் தனிப்படை விசாரணை செய்கிறது.

இங்கு அதிக அளவிலான மீன்கள் புதியவர்களால் விற்கப்பட்டனவா? எனவும் கேட்டு வருகிறோம். மீன்கள் காணாமல் போன சரியான நாளை அமைச்சரால் அளிக்க முடியாமையால் மீன்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.’ எனத் தெரிவித்தார்.

எருமைகளை தேடிய உ.பி.யின் தனிப்படை

இதற்கு முன் பிப்ரவரி 2014 இல் சமாஜ்வாதி ஆட்சியில் அதன் மூத்த அமைச்சர் ஆஸம்கானின் பண்ணை வீட்டிலிருந்து 7 எருமைகள் இதுபோல் காணாமல் போயின. இவற்றை தேடவும் உபியின் ராம்பூரில் போலீஸார் தனிப்படை அமைத்திருந்தது.

இதற்காக மோப்ப நாய்கள் அமர்த்தியும் கிடைக்காமல், எருமைகள் குறித்த துப்பு தருவோருக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்த எருமைகள் திருட்டிற்கு பொறுப்பாக அப்பகுதி காவல்நிலையத்தின் மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதும் நினைவுகூரத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x