Published : 16 Aug 2020 05:54 PM
Last Updated : 16 Aug 2020 05:54 PM

21-ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டும்; வாஜ்பாயின் கனவை நனவாக்குவோம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

புதுடெல்லி

21-ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டுமென்ற வாஜ்பேயி-யின் கனவை நனவாக்குவதில் வெற்றி பெறுவோம் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறினார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியக் கலாச்சார உறவுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்தை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இன்று (ஆகஸ்ட் 16, 2020) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அடல் பிகாரி வாஜ்பாயி, 1977 முதல் 1979 வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், இந்தியக் கலாச்சார உறவுகள் நிறுவனத்தின் மரபுவழித் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி மூலம், இந்திய அரசியலில் ஒளிமயமான அத்தியாயத்தைப் படைத்த அறிவாற்றல் மிக்க தேசியவாதிக்கு, காணொளிக் காட்சி வாயிலாக நமது மரியாதையை செலுத்தி வருவதாகக் கூறினார். அடல் பிகாரி வாஜ்பாயி, சுதந்திரமான சிந்தனை மற்றும் ஜனநாயக ரீதியில் கருத்து தெரிவிப்பதில் உறுதியாக இருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனித்துவமிக்க அடையாளத்தை விட்டுச் சென்றுள்ள வாஜ்பாயி, கட்சித் தொண்டர், நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு முக்கியத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் பிரதமர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த போது, சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என்றும் புகழாரம் சூட்டினார். தேச நலன் தான் தலையானது என்பதை, தமது செயல்பாடுகள் மூலமாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைத்தவர் வாஜ்பேயி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 காரணமாக, ஒட்டு மொத்த உலகமும் தற்போது பெரும் அபாயத்தில் இருப்பதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். எனினும், இந்த பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு, நாம் முன்னேற்றம் மற்றும் வளமான பாதையை நோக்கி அதிவேகமாக செல்வதுடன், 21-ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டுமென்ற வாஜ்பாயி-யின் கனவை நனவாக்குவதில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x