Last Updated : 15 Aug, 2020 06:15 AM

 

Published : 15 Aug 2020 06:15 AM
Last Updated : 15 Aug 2020 06:15 AM

சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியா? - கட்சிப் பதிவு தொடர்பாக டெல்லி வழக்கறிஞருடன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சுவார்த்தை

புதுடெல்லி

மத்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஓர் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக டெல்லி வழக்கறிஞர் ஒருவருடன் நடிகர்விஜயின் தந்தை இயக்குநர்எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு அப்பதவிக்கு எதிர்பார்க்கப்படும் திரையுலகப் பிரபலமாக இருப்பது ரஜினிகாந்த். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு குரல் கொடுத்தது முதல் இவரது அரசியல் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ரஜினி காட்டிய தயக்கத்தால் நடிகர் விஜய் அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டினார். இருப்பினும், அவருக்கு முன்னதாக விஜய்காந்தும், கமலஹாசனும் அரசியலில் குதித்து விட்டனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரையுலக நட்சத்திரங்களின் அரசியல் நுழைவு பேசப்படுவது வழக்கமாகி விட்டது. அந்தவகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் செய்திகள் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளன. மத்தியதேர்தல் ஆணயத்தில் புதிதாக அரசியல் கட்சி பதிவு செய்வது தொடர்பாக நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் சென்னையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில் முன் அனுபவம் பெற்ற டெல்லி வழக்கறிஞர் ஒருவருடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி வழக்கறிஞரின் நண்பர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “கட்சிப் பதிவு குறித்து பேசுவதற்காகவே இந்த வழக்கறிஞர் சில தினங்களுக்கு முன் விமானம் மூலம் சென்னைக்கு அழைக்கப்பட்டார். விஜய் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் அவரது தந்தை மட்டுமே இடம் பெற்றிருந்தார். கரோனா பரவல் சூழலில் அழைக்கப்பட்டு பேசி இருப்பதால் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது” என்றனர்.

தேர்தல் ஆணையத்தில் புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிக்காக ஒரு நிறுவனத்தை இந்த வழக்கறிஞர் நடத்தி வருகிறார். தெலுங்கு, கன்னடம் திரைப்பட நட்சத்திரங்களுக்கு புதிய அரசியல் கட்சிகளை இவர் பதிவு செய்து கொடுத்துள்ளார். இவரிடம்தான் ரஜினிகாந்தும் தனது அரசியல் கட்சிப் பதிவுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பிறகு அதை பாதியில் நிறுத்திவிட்டு வேறொரு வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தையை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் திரையுலகமும் அரசியலும் இணைந்திருக்கும் நிலை மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் ஓங்கியுள்ளது. அரசியலுக்கு வரும் திரைப்பட நட்சத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பும் தமிழகத்தில் அதிகம். இதன் காரணமாக, திரைப்படங்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியல் செய்ய அதன் நட்சத்திரங்கள் விரும்புகின்றனர். இதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பற்றி எழும் கவலையால், அரசியலில் நுழைவதன் மீதான முடிவில் தாமதமும், தயக்கமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

விஜய் நடித்து வெளியாகும் திரைப்படங்களில் சமீப காலமாக அரசியல் அதிகமாகக் கலந்திருப்பது, அவரது அரசியல் வருகையை குறிப்பதாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலே புதியவர்களின் அரசியல் நுழைவுக்கு பொருத்தமான காலமாகக் கருதப்படுகிறது. இந்த வாய்ப்பை திரையுலகினர் அதன் பின்னணியில் தங்கள் புதிய திரைப்படங்களை வெற்றியடையச் செய்ய பயன்படுத்துவதாகவும் ஒரு புகார் இருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x