Last Updated : 03 Aug, 2020 01:29 PM

 

Published : 03 Aug 2020 01:29 PM
Last Updated : 03 Aug 2020 01:29 PM

அயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள்  2021 ஜூன் மாதம் நிறைவடையும்: ரயில்வே அறிவிப்பு

அயோத்தி ரயில் நிலையத்தின் தற்போதைய தோற்றம்: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் வடிவமைப்பைப் போல் அமைக்கப்பட்டுவரும் ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என்று ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரில் உள்ள ரயில் நிலையம் மிகவும் பழையதாக இருந்ததால், அதை மறுகட்டமைப்புச் செய்து கட்டுவதற்காக கடந்த 2017-18 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.104 கோடி அளவில் திட்டம் தயார் செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் ரயில் நிலையக் கட்டுமானம் தொடர்பாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் ராஜீவ் சவுத்ரி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“அயோத்தியில் உள்ள ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு ரூ.104 கோடி மதிப்பில் மறுகட்டமைப்புச் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடியும். ரயில் நிலையத்தில் நடைபாதை 1,2,3 ஆகியவற்றின் பணிகள் நடந்துவருகின்றன. அவை முடிந்துவிடும் என நம்புகிறோம்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் அயோத்தி ரயில் நிலையத்தின் மாதிரி வரைபடம்.

இரண்டாவது கட்டப்பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. புதிய ரயில் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான புதிய வசதிகள் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்ட்டர்கள் அதிகரிப்பு, பயணிகள் காத்திருப்பு அறை விரிவாக்கம், குளிர்சாதன வசதியுடன் கூடிய 3 ஓய்வறைகள், கழிப்பறையுடன் ஆண்கள் மட்டும் தங்கக்கூடிய தங்குமிடம், கழிப்பறை வசதியுடன் 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம், உணவகம், சுற்றுலா மையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

அயோத்தி கோயில் நகரம், கோடிக்கணக்கான பக்தர்கள், பயணிகள் வரும் இடம் என்பதை மனதில் வைத்து நவீன வசதிகளுடன் ரயில் நிலையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இறுதியாக ரயில் நிலையம் மட்டும் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் இருக்கும்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x