Published : 27 Jul 2020 06:48 AM
Last Updated : 27 Jul 2020 06:48 AM

ரூ.100 லஞ்சம் தராததால் முட்டை வண்டியை கவிழ்த்த இந்தூர் மாநகராட்சி ஊழியர்கள்: சிறுவனுக்கு குவிகிறது உதவிகள்

இந்தூர்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தள்ளு வண்டியில் முட்டை வியாபாரம் செய்யும் சிறுவன், ரூ.100 லஞ்சம் தராததால் அந்த வண்டியை கவிழ்த்துவிட்டனர் மாநகராட்சி அதிகாரிகள். இந்த சம்பவம்பற்றி அந்த சிறுவன் வெளியிட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில் அவனுக்கு ஆதரவும், உதவிகளும் குவிகின்றன.

‘‘கரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போது தினசரிவிற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. வண்டியை கவிழ்த்துவிட்டதால் முட்டை வீணாகி எனக்குமொத்த வருமானமும் போய்விட்டது’’ என்று அந்த சிறுவன் வீடியோவில் வேதனையுடன் கூறி இருக்கிறான்.

இந்தூரைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் பரஸ் ராய்கர். 13 வயதுடைய அந்தச் சிறுவன், தள்ளுவண்டியில் முட்டைகளை வைத்து விற்று பிழைப்பு நடத் துபவர். கரோனா பிரச்சினை காரணமாக கடைகளை திறக்க நேரக் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது இந்தூர் மாநகராட்சி நிர்வாகம். கடந்த வியாழக்கிழமை காலை, கடை வீதிக்குச் சென்ற அதிகாரிகள் ரூ.100 லஞ்சம் தராவிட்டால் வண்டியை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பரஸை மிரட்டி உள்ளனர்.

லஞ்சம் தரமுடியாது என்று பரஸ் மறுக்கவே, அந்த வண்டியை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்ததால் முட்டைகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் பற்றி பரஸ் வெளியிட்டு வேதனையை பகிர்ந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ வெளியான பிறகு ஏராளமானோர் சிறுவனுக்கு பணம், பொருள் கொடுத்து உதவமுன்வந்துள்ளனர். இந்தூர் பத்திரிகையாளர் சங்கம் பரஸ் குடும்பத்தாருக்கு மளிகை பொருட்களும், ரொக்கமும் கொடுத்து உதவியுள்ளது.

இதுபற்றி பரஸின் தாத்தா கூறியதாவது: நாடு முழுவதிலும் இருந்து எங்களுக்கு உதவி குவிகிறது. இந்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ரமேஷ் மென்டோலா, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் இருந்து வீடு வழங்கியதுடன் சைக்கிளும் ரூ.2,500 ரொக்கமும் கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் ரூ.10 ஆயிரம் கொடுத்து, பரஸ் உள்ளிட்ட எங்களது இரு பிள்ளைகளின் கல்விச்செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தொடர்பு கொண்டு உதவி செய்ய முன்வந்துள்ளனர். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் உதவி செய்வதாக உறுதி கூறியுள்ளார்.

இவ்வாறு தெரிவித்தார் பரஸின் தாத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x