Published : 24 Jul 2020 08:04 AM
Last Updated : 24 Jul 2020 08:04 AM
மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 10 மாநிலங்களுக்குட்பட்ட 38 மாவட்டங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்படும். இந்த திட்டத்தின் தொடக்க நாளான இன்று (நேற்று) 600 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்படும். இதற்காக 5 லட்சம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும். இயற்கையே நமது தாய் அதை அழிக்கக் கூடாது என்பதுதான் இந்திய கலாச்சாரம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நாம்இதை மறந்துவிட்டோம். இதனால்தான் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன் பருவநிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மரங்கள்தான் மனிதனின் நண்பன் என்றும் மரங்களால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
மரங்களின் முக்கியத்துவத்தை இந்திய கலாச்சாரம் ஏற்றுக்கொண்டுள்ளது. நிலக்கரி மற்றும் தாதுப்பொருள் சுரங்க தொழிலாளர்களைப் பற்றி முந்தைய ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு மாவட்ட தாதுப்பொருள் நிதியத்தை உருவாக்கியது. இதன் மூலம் சுரங்கங்கள் உள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.49 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT