Published : 23 Jul 2020 07:03 AM
Last Updated : 23 Jul 2020 07:03 AM

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறி கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை பகுதியில் 40 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது சீனா

கோப்புப் படம்

புதுடெல்லி

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி உண்மையான எல்லைக் கட்டுப்பாட் டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) 40 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா - சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

எனினும், இரு நாடுகளிடையே ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் கடந்த மாதம் 30-ம் தேதி இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் நடத்திய 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறஉடன்பாடு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 14, 15-ம் தேதிகளில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து ஆயுதங்
கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை குறைத்துக் கொள்வது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியில் நேற்று சீனா தனது 40 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. பேச்சு வார்த்தையில் படைகளை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்த பின்னரும், அப்பகுதியில் ஏராளமான ராணுவ
வீரர்களை சீனா குவித்து வைத்துள்ளது இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளிலும் ராணுவ கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 பகுதிகளும் கிழக்கு லடாக் பகுதியின் முக்கிய பகுதிகளாக அறியப்படுபவை ஆகும். இதையடுத்து பதிலுக்கு கிழக்கு லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியை அடுத்த மண்ஸச்சிஸ் என்ற பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x