Published : 22 Jul 2020 07:55 AM
Last Updated : 22 Jul 2020 07:55 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. எனவே, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் ஒன்று கூடவும், கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்த சூழலில், டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக மார்ச் மாதம் ஒரு மத மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு திரும்பியவர்களால்தான், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தப்லீக் மாநாட்டில் பங்கேற்பதற்காக விசா நடைமுறைகள், அரசு வகுத்த விதிகள் உட்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக வங்கதேசம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 129 பேர் மீது டெல்லி பெருநகர நீதிமன்றங்களில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட 129 பேரில் 121 பேர், தங்களின் விதிமீறல் குற்றங்களை ஒப்புக் கொள்வதாகவும், எனவே தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, டெல்லியில் உள்ள இருவேறு பெருநகர நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்றது. அப்போது, குற்றத்தை ஒப்புக் கொண்ட 121 வெளிநாட்டினருக்கு (79 வங்கதேசத்தினர், 42 கிர்கிஸ்தானியர்கள்) தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. மீதமுள்ள 8 வெளிநாட்டினர், தாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், விசாரணையை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT