Last Updated : 18 Jul, 2020 08:56 AM

 

Published : 18 Jul 2020 08:56 AM
Last Updated : 18 Jul 2020 08:56 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு

கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கடந்தஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று மடிகேரியில் 11 செ.மீ.மழை பெய்ததால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.32 அடியாக உயர்ந்துள்ளது. குடகு மாவட்டத்தில் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2853 அடியாக உயர்ந்துள்ளது.ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2892 அடியாக உயர்ந்துள்ளது.

இதே போல கேரள மாநிலம்வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினிஅணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 2271.42 அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை தமிழகத்துக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்துவருவதால் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு வரும்நீரின் அளவை பொறுத்து, தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின்அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x