Last Updated : 18 Jul, 2020 08:51 AM

 

Published : 18 Jul 2020 08:51 AM
Last Updated : 18 Jul 2020 08:51 AM

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை: எந்த எதிர்மறை விளைவும் இல்லை

கோப்புப்படம்

சண்டிகர்

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி நேற்று பரிசோதிக்கப்பட்டது, இதில் முதல்கட்டமாக எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம், சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் பரிசோதித்து வருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகள் அனைத்தும் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் நடந்து வருகிறது.முதல் கட்டமாக நேற்று மூன்று தன்னார்வலர்களுக்கு இந்த கோவாக்ஸின் மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை, அறிவியல் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணி ரோடக் நகரில் உள்ள பிஜிஐ நிறுவனத்தில் நடந்து வருகிறது.

3 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் வரவில்லை. அனைவரும் தடுப்பு மருந்தை தாங்குகின்றனர். அடுத்து வரும் நாட்களில் தன்னார்வலர்கள் அதிகமாகச் சேர்க்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்

ரோடக் நகரில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் நிருபர்களிடம் கூறுகையில் “ கோவாக்ஸின் மருந்து முதல்கட்டமாக 3 மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. எந்த எதிர்மறையான விளைவும் இல்லை.

இந்த பரிசோதனை தொடர்ந்து 6 மாதங்கள்வரை நடக்கும். முதல் 3 மாதங்கள் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தன்மை குறித்தும், உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குகிறது குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஏதாவது எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகிறதா என பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனைக்கு 30 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
முதல்கட்டமாக 10 நபர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது, இதில் 3 பேருக்கு இப்போதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப்பட்டு பலருக்கும் பரிசோதிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

கரோனா வைரஸக்கு எதிராக நாட்டில் 7 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்புகளில் இருக்கின்றன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் நிறுவனத்துக்கு மட்டும் மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x