Published : 17 Jul 2020 04:12 PM
Last Updated : 17 Jul 2020 04:12 PM

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: மேலும் 2 பேர் கைது

கேரள தங்கக் கடத்தில் வழக்கில் மேலும் இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார்.

தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை நேரில் ஆஜராக திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்றார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இது தவிர சிவங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த தலைமைச்ச செயலாளர் டாக்டர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்திருந்தார். அந்த குழுவினர் விசாரணை நடத்தியதில், தங்கம் கடத்தலில் கைதாகி இருக்கும் ஸ்வப்னா சுரேஷுடன் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து இந்திய குடிமைப்பணிச் சேவை விதிகளின்படி, சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இந்த சூழலில் இந்த தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியத் துருப்பாக ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி ஒருவர் சாட்சியாக இருந்து வந்தார். ஆனால், வியன்னா ஒப்பந்தத்தின் பாதுகாப்பை பயன்படுத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தனது சொந்த நாட்டுக்கு தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபுபக்கர் மற்றும் அப்துல் ஹமீது ஆகிய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது விரைவில் இவர்கள் இருவரும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x