Published : 16 Jul 2020 07:39 AM
Last Updated : 16 Jul 2020 07:39 AM
எல்லையில் சீன மற்றும் இந்திய படைகள் படிப்படியாக வாபஸ் பெற்று வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்கிறார். அவர் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய
உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியையும் ஆய்வு செய்கிறார்.
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சூசல் பகுதியில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே நேற்று முன்தினம் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஃபிங்கர் மற்றும் டெப்சாங் பகுதிகளில் பதற்றத்தைத் தணிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும் மீதம் உள்ள படை வீரர்கள் மற்றும் போர்த் தளவாடங்களை விலக்கிக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை லடாக் செல்கிறார். அவருடன், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் செல்கிறார். எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை மறுநாள் இருவரும் ஆய்வு செய்ய உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவுடன் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவு வதை தடுப்பதற்காக லடாக்கின் மேற்குப் பகுதியில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT